நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நெடுந்தீவிற்கு பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக, கடல் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை கடற்படையினரால் கடந்த செப்டம்பர் 06 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 5G கோபுரம் அமைத்தலுக்கான உபகரணங்கள் , கனரக இயந்திரம் என்பனவும் வீதி திருத்தப்பணி திட்டத்திற்குத் தேவையான பாரிய அளவிலான இயந்திரங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை காங்கேசன்துறை துறைமுகத்தியிலிருந்து நெடுந்தீவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இவ்வாறு கடல் போக்குவரத்து வசதிகள் வழங்கும் நடவடிக்கை வடக்கு கடற்படைக் கட்டளையினால் மேற்கொள்ளப்பட்டது.
நெடுந்தீவை நிலையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நெடுந்தீவின் குடிநீர் விநியோகம், வீதிகள் அமைத்தல், போக்குவரத்துச் சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என கடற்படை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்படையினரால் இவ்வாறு வசதிகள் வழங்கப்பட்டமையின் ஊடாக, நெடுந்தீவின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கான இயலுமை கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.