தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்வதற்கு பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாத நிலையில் இயலாமையால் தான் நெடுந்தீவு மக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். இவ்வாறான நிலை அந்த மக்களுக்கு வந்தமை இட்டு தான் கவலையடைவ தாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமது அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வை தரக்கோரி நெடுந்தீவில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 90களின் ஆரம்பத்தில் தீவகப் பகுதிகுள் அரச படையினரால் விடுவிக்கப்பட்ட பின்னர் அன்றைய அரசு சக தமிழ் கட்சிகளுக்கு மக்கள் பணிகளில் ஈடுபட வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் அன்று எந்த கட்சிகளும் அதற்கு முன்வரவில்லை. அதன் பின்னரே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று நாம் அங்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு வாழ்ந்த மக்கள் எதிர்கொண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு எமக்கு இருந்தது. அவற்றை அனைத்த வழிகளிலும் செய்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பான அமைதியான வாழ்வியலை ஏற்படுத்திக் கொடுத்திருந்திருக்கின்றோம்.
குறிப்பாக நெடுந்தீவை சேர்ந்த மக்கள் தமது மூத்த பிரதிநிதிகளுடன் எம்மை சந்தித்திருந்தார்கள். இதன் போது தாம் பட்டினியில் எல்லையில் இருக்கின்றோம் என்றும் தமது வாழ்க்கையை பாதுகாத்து தருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்கள். அவர்களின் அழைப்பின் பேரில்தான் நாம் நெடுந்தீவு சென்றிருந்தோம். நெடுந்தீவு மக்கள் தமது எந்த பிரச்சினையானாலும் சரி அதற்கான தீர்வைபெற எமக்கே தொடர்புகளை மேற்கொள்வார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அந்த மக்களுக்கு யாருடனும் தொடர்புகொண்டு தமக்கான தீர்வுகளை பெற அல்லது சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள இயலாமையால் பல முயற்சிகளை செய்தும் அது கைகூடாதபடியினால் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தார்கள்.
இந்த நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டமை கவலைக்குரியது. நாம் எங்களால் முடிந்தளவு அந்த மக்களுக்கான சேவைகளை செய்திருக்கின்றோம். இது அங்கு வாழும் பிரதேச மக்களுக்கு நன்கு தெரியும் என்றார்