வெற்றிலையுடன் புகையிலை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை   செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17/07) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் முதலாவது அட்டவணையின்படி, நாட்டில் புகையற்ற புகையிலைத் தயாரிப்புகளை விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என உபுல் ரோஹண வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், இது வெற்றிலைப்பாக்கு விற்பனையாளர்களை அசௌகரியத்திற்குள்ளாக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டம் அல்ல என்றும், இந்நாட்டு மக்களை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம் என்றும் அவர் கூறினார்.

இந்நாட்டில் வருடாந்தம் 1,750 க்கும் 1,900 க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகின்றனர்.

இதன் காரணமாக, இந்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி மக்களை அந்த நோய் நிலைமையிலிருந்து பாதுகாப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கமைய, எதிர்காலத்தில் வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது.

புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால், 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபில் ரோஹண எச்சரித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கலாசாரக் காரணிகள் காரணமாக, குறித்த சட்டத்தின் கீழ் இதுவரை நேரடியாகச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்றும், விழிப்புணர்வு மாத்திரமே ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்கள் தங்களைத் திருத்திக்கொள்வதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என உபுல் ரோஹண தெரிவித்தார்.

Share this Article
Leave a comment