நெடுந்தீவில் தொல்பொருள் இடத்தினை சேதப்படுத்திய விவகாரத்தில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்……
நெடுந்தீவில் மேற்கில் உள்ள கோட்டை வீதி புனரமைப்பின் போது தொல்பொருள் சின்னமாக அடையாளமிடப்பட்டிருந்த பகுதி சேதமாக்கப்பட்டதால் நேற்றையதினம் (நவம்பர் 05) இரவு நெடுந்தீவு பிரதேச சபை சாரதிகள் இருவர் நெடுந்தீவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றினால் இன்று (நவம்பர் 06) பிணையில் விடுவிக்கபட்டிருந்தனர்.
அத்துடன் இதன் தொடர்ச்சியான நடவடிக்கைக்காக துறைசார் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் தடயவியல் பொலிசாரும் குறித்த பகுதியில் ஆய்வினை இன்று மேற்கொண்டிருந்தனர்.
இதன்பிரகாரம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின்படி நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், தொழில்நுட்ப அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசாரால் இன்று கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்றே நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்களை பிணையில் நீதிமன்று விடுவித்துள்ளதுடன், இது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வருடம் தை மாதம் இடம்பெறும் என தெரியவருகின்றது.