நெடுந்தீவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (குமார் – வயது 59) என்பவரே இவ்வாறு பலியானவராவார்.
நேற்றையதினம் (ஜூன் 15) இரவு நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே வேகமாக வந்த முச்சக்கரவண்டி வீதியினை கடக்க முற்பட்டவரை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்த நிலையில் உடனடியாக நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக உடல் தற்போது யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக நெடுந்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மது பாவனைக்கான பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்ட பின்னர் இன்று (ஜூன் 16) காலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.