தேசிய சுதந்திர முன்னணியின் நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இன்று (27/05) இவ்வழக்கு பகிரங்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் ஊடகப் பேச்சாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது முஸம்மில் மற்றும் சேனரத்ன டி சில்வா, மற்றும் இந்த வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக தற்போது பிணையில் உள்ள மேலும் ஐந்து சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேலதிக நடவடிக்கைக்காக இவ்விவகாரம் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.