குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பணி நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நிர்வாகக் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 275 உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் நேற்று (26/05) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்குக் கூடுதல் சுமையைக் கொடுக்காமல் அரசாங்கம் பொருளாதாரத்தை மேலாண்மை செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், நாடு முழுவதுமுள்ள 11 பயிற்சி மையங்களில் இப்பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

தாய் மற்றும் சேய் சுகாதார மேம்பாடு, சுகாதாரக் கல்வியை வழங்குதல் மற்றும் குடும்ப சுகாதார ஊழியர்களின் களப் பணிகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட பொறுப்புகள் இந்த உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், உலக சுகாதார அமைப்பின் இம்முறை உலக சுகாதார மாநாட்டில் இலங்கையின் இலவச சுகாதார சேவைக்குச் விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், அதன் பெருமையில் பெரும் பங்கு குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பால் கிடைத்ததாகும் என்றும் தெரிவித்தார்.

Share this Article
Leave a comment