தனது ஆட்சி நீடித்திருந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பை 275 ரூபாயாகக் குறைத்திருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் நடைபெற்ற பொது எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போதைய ஆட்சியாளர்களால் கூட திட்டமிட்டிருந்தால் அதனை ஆகக்குறைந்தது 280 ரூபாய்க்காவது கொண்டு வந்திருக்க முடியும் என்றார்.
ரூபாய் வலுவடைந்திருந்தால் தற்போதைய அரசின் வரி அதிகரிப்பு மக்களுக்கு அந்தளவிற்குப் பெரிய சுமையாகத் தெரிந்திருக்காது என்றும், பணவீக்கம் இல்லாததால் ரூபாயின் மதிப்பு நிலைத்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயற்படாததால் நாட்டின் செலவீனங்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய ரணில், நாட்டின் பொருளாதார அமைப்புகளை ஒரு வாகனத்தின் தனித்தனி பாகங்களுக்கு ஒப்பிட்டுப் பேசினார்.
தாம் அவற்றை ஒன்றிணைத்து ஒற்றை வாகனமாக முன்னோக்கிச் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழல் ஒருவேளை முடிவுக்கு வந்தாலும் கூட, தற்போதைய அநுர அரசின் கீழ் பொருளாதார நிலைமைகளைக் கையாள்வது எளிதாக இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்