தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் நேற்றுத் தமிழகம் சென்றுள்ளனர்.
நேற்றுக் காலை(மே 6) தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் வந்திறங்கியவர்களை தமிழக மரைன் பொலிஸார் படகில் அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருள்கள், அத்தியாவசிய தேவைகளைப் பெறுவதில் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதையடுத்துக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 244 இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், நான்கு பெண்கள், மூன்று ஆண்குழந்தை ஒரு பெண் குழந்தை உட்பட 3 குடும்பத்தினர் முல்லைத்தீவுக் கடற்கரையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு நேற்று அதிகாலை தனுஷ்கோடி அடுத்துள்ள முதல் மணல் திட்டில் பகுதியில் வந்திறங்கியுள்ளனர்.
இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் காத்திருப்பதை கண்ட அந்தப் பகுதியில் மீன் பிடித்த நாட்டுப்படகு மீனவர்கள் மரைன் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் ஒன்றாம் மணல் திட்டுக்கு படகில் சென்று அங்கு காத்திருந்த இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.