யாழ்ப்பாணம் நகரில் (ஜே/72 ) யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பெறுமதிமிக்க ஆதனமொன்று, வெளிப்படுத்தல் உறுதி மூலம் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு, வடக்கு மாகாண அவைத் தலைவரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக, சர்ச்சைக்குரிய ஆதனத்தை ஆளுநர் அவர்கள் இன்று (26.05) காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.
குறித்த ஆதனமானது யாழ். மாநகர சபைக்கு உரித்தானது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நில அளவைத் திணைக்கள வரைபடங்கள் என்பன தம்மிடம் உள்ளமை தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் இதன்போது ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினர்.
ஆயினும், குறித்த ஆதனத்தின் பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சோலை வரியும் அறவிடப்பட்டுள்ளமை குறித்தும் இதன்போது ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
விடயங்களை விரிவாக ஆராய்ந்த கௌரவ ஆளுநர், குறித்த ஆதனம் தொடர்பான சந்தேகத்துக்கிடமான பெயர்மாற்றம் மற்றும் வரி அறவீட்டு விடயங்களைக் கையாண்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைக் குழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். அத்துடன், முறையற்ற விதத்தில் தனிநபர் வசமாகியுள்ள குறித்த ஆதனத்தை மீள மாநகர சபைக்கு மீட்டெடுப்பதற்காகத் துரிதமாக நீதிமன்றப் பொறிமுறைகளை நாடுமாறும் அவர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த விசேட கள ஆய்வின்போது, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபையின் ஆணையாளர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி முதல்வர், உரிய பிரிவின் கிராம அலுவலர் மற்றும் காணி அலுவலர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.