மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் விரைவாக நடாத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. தற்போதைய நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கொண்டுள்ள அரசாங்கம் கால இழுத்தடிப்பின்றி தேவையான சட்டத் திருத்தத்தினை முன்னெடுக்க வேண்டும என்பதே தம்முடைய எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.
பப்ரல் அமைப்பினால் ஹக்டர் கொப்பேக்கடுவா விவசாய ஆராய்சி நிறுவனத்தில் நடாத்தப்பட்ட கருத்தமர்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கலந்து கொண்ட கட்சியின் சிரேஸ்ட முக்கியஸ்தர்களுள் ஒருவரான எம்.ஐ. ஸ்ராலின் முருகன், குறித்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்த சுமார் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கருத்தமர்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஸ்ராலின்,
மாகாண சபைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான வகிபாகத்தினை உறுதிப்படுத்துவது அவசியம் என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
ஆனால், தற்போதைய நிலையில் மாகாண சபை முறைமை தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் நடைமுiறில் இருந்த விகிதாசார முறையில் தேர்தலை உடனடியாக நடாத்த வேண்டும்.
அதேபோன்று பொலிஸ் அதிகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸாவினால் உருவாக்கப்பட்ட 1990 ஆண்டு 1 ஆம் இலக்க சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி கையொப்பம் இட்டு அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன், நாடாளுமன்ற தனிப்பெரும்பான்மையை பயன்படுத்தி காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அதனூடாக மாகாண சபைக்கான அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஈ.பி.டி.பி. கட்சியின் நிலைபாடாகும்’ என்று தெரிவித்தார்.
இந்த நிலைப்பாட்டினையே கருத்தமர்வில் கலந்து கொண்ட அனைத்து தரப்புக்களும் முன்வைத்த நிலையில், இக்கருத்துக்கள் கருத்தமர்வின் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதுடன், மாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு குறித்த தீர்மானத்தினை அனுப்பி வைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது