தேர்தல் அலங்கரிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, அதற்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளன.
இனிமேல், ஒவ்வொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேட்சை குழுவோ திறந்துள்ள உள்ளூராட்சி மன்ற அலுவலகங்கள் அல்லது வாக்குச்சாவடி அலுவலகங்களில் 60 அடி அளவிலான பேனர்களை தவிர, வேறு எந்தவொரு அலங்காரப் பொருட்கள் அல்லது போஸ்டர்களையும் அங்குத் தொங்க விட முடியாது.
அதேபோல், வேட்பாளர்கள் பயணிக்கும் வாகனங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதும் எடுத்துச் செல்லுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இத்தகைய கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது, அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்களிக்கும் தருணங்களை படம் பிடித்து ஊடகங்களில் வெளியிட வேண்டுமானால், அதனை பிற்பகல் 4.00 மணிக்குப் பிறகு மட்டுமே செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 4.00 மணிக்கு முந்தி அவ்வாறு காணொளிகள் மற்றும் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறும், தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறான அறிவுறுத்தல்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கி, ஒரு சுதந்திரமான தேர்தலை உறுதிசெய்வதில் எல்லோரும் பங்களிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.