பதின்ம வயதுச் சிறுமியைக் காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயலுக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞரின் பெற்றோரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
16 வயதுச் சிறுமி ஒருவரைக் காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் சில தினங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், 20 வயது இளைஞர் ஒருவரின் வீட்டிலிருந்து சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
அந்த வீட்டில் இருந்த இளைஞர் கைது செய்யப்பட்டு ஆள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளைஞரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இளைஞரின் வீட்டில் அவரது பெற்றோரும் வசித்த நிலையில், குற்றச் செயலுக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்களைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
அதற்கமைய பெற்றோர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். அவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.