நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் தன்னிடம் முழுமையான அறிக்கையை வழங்கியுள்ளது என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
டுபாயிலிருந்து 8 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் சுங்கத் திணைக்களத்திடம் சபாநாயகர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அலி சப்ரியிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ள போதும், அவர் இதுவரை அது தொடர்பில் எந்தப் பதிலும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.