நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்விசாரா அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்று சென்ற வே.விஜயகுமாரன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் ஐ. தயாபரன் தலைமையில் பிரதான மண்டபத்தில் நேற்றையதினம் (ஏப்ரல்21) இடம்பெற்ற மணிவிழா நிகழ்வில் விழா நாயகன் மற்றும் அவரது பாரியாரும் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டு விழா மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அரங்க நிகழ்வுகளில் வகுப்பு ரீதியாக மாணவர்கள், பாடசாலை சார் அமைப்புகள் என்பவற்றின் நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் வாழ்த்துரைகளும் இடம்பெற்றது.
தொடர்ச்சியாக 28 வருடங்கள் நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும், அதற்கு முன்னர் 03 வருடங்கள் நெடுந்தீவு கோட்டக்கல்வி அலுவலகத்திலும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. மகாவித்தியாலயத்தில் ஐந்து அதிபர்களுக்கு கீழ் சிறப்பாக பணியாற்றி ஓய்வு நிலை பெற்றிருப்பதுவரவேற்கத்தக்கது.
இந்நிகழ்வில் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.