இலங்கையிலுள்ள இந்தியத் துணைத் தூதரும், யாழ்ப்பாணத்தில் செயல்படும் இந்தியத் துணைத் தூதரகத்தின் தலைவருமான சாய் முரளி இன்று (07/04) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி அவர்களை துணைவேந்தர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இச்சந்திப்பு, இருநாடுகளுக்கிடையிலான கல்வி மற்றும் பண்பாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனது புதிய பொறுப்பை ஏற்றுள்ள பேராசிரியர் வேல்நம்பி அவர்களுக்கு சாய் முரளி அவர்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, அவரின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் புதிய உயரங்களை எட்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
இதன் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் எதிர்கால முன்னேற்றப் பாதைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. குறிப்பாக கல்வித் தர உயர்வு, ஆய்வுத்துறை விரிவாக்கம், மாணவர் பரிமாற்ற திட்டங்கள், தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ஒத்துழைப்புகள், மற்றும் சர்வதேச இணைப்புகளை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக கருத்துகள் பரிமாறப்பட்டன.
மேலும், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உயர்கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பல்வேறு வாய்ப்புகள் பற்றியும் பேசப்பட்டதாக அறியப்படுகிறது. இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் புதிய அனுபவங்களையும் திறன்வளர்ச்சிக்கும் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சந்திப்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆய்வு வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை வழங்குவதோடு, இந்தியா–இலங்கை உறவுகளை கல்வித் துறையில் மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது.