வரலாற்றுப் புகழ் பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகப் பெருவிழாவில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் தருமபுரம் ஆதீன ஶ்ரீலஶ்ரீ 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 08) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வழியாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்கள். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவை ஆதீனத்தின் சார்பாக அச்சுவேலியில் உள்ள சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் பூரணகும்பம் வைத்து வரவேற்பளித்தார்.
அதன்பின், நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலின் பிரதம சிவாச்சாரியர் சிவஸ்ரீ முத்து ஸ்ரீநீவாக குருக்கள், திருநெல்வேலி நீலாயாதாட்சி சமேத காயாரோகேணேஸ்வரர் ஆலயத்தின் சிவஸ்ரீ சதா சிவகுமாரக் குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீ சிவஆனந்த கிருஷ்ண சர்மா ஆகியோர் மலர் மாலைகளுடன் ஆதீனத்தை வரவேற்றனர்.
தொடர்ந்து திருக்கேதீஸ்வரம், நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலின் ஆலய அறங்காவலர்கள் மற்றும் லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் இணை ஸ்தாபகர் கலாநிதி அப்பையா தேவசகாயம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறவுள்ளது. இதற்கான முன்னோடிகிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமைதொட்டு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
நாளை வியாழக்கிழமை (ஏப்ரல் 10) வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.