30 ஆண்டுகளிற்கு பின்பு விடுவிக்கப்பட்ட வலி வடக்கில் அண்மையில் சில பிரதேசங்கள் பொது மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது. அவ் இடங்களில் பல பொது மக்களது மிகவும் பெறுமதி வாய்ந்த உடைமைகளும் சொத்துக்களும் இருந்தன.
அந் நிலப்பரப்புக்கள் விடுவிக்கப்பட்டவுடன் ஊடகங்கள் மூலமாகவும் கிராம மட்ட அலுவலர்கள் ஊடாக தொலைபேசி வாயிலாகவும் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட இடங்களிலுள்ள, தங்களது நிலப் பிரதேசங்களை உரிய முறையில் அடையாளப்படுத்தி பெறுமதியான தங்கள் சொத்துக்களையும் உடமைகளையும் பாதுகாக்குமாறு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கோரிக்கைக்கு அமைவாக பல பொது மக்கள் தமது நிலப் பிரதேசங்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் சில காணி உரிமையாளர்கள் தமக்குரிய நிலப் பிரதேசங்களை அடையாளப்படுத்தி அங்கு தமக்கு சொந்தமான உடமைகளை பாதுகாப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வதில் அசமந்த போக்குடன் இருக்கின்றனர்.
இந்தகைய சந்தர்ப்பங்களை தமக்கு மிகவும் சாதகமாகப் பயன்படுத்தி பல்வேறு பிரதேசங்களில் இருந்து நாளாந்தம் வருகை தரும் பல திருட்டு கும்பல்கள் மிகவும் பெறுமதியான சொத்துக்களையும் உடைமைகளையும் திருடிச் செல்கின்றனர்.
இத்தகைய சம்பவங்கள் பகல் இரவு என அனைத்து வேளைகளிலும் மிகவும் நூதனமான முறையில் நடைபெறுவதால் பொது மக்களின் உடைமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடமும் நாம் கோரிக்கை முன்வைத்திருந்தோம்.
இருப்பினும் மிகப் பரந்தளவிலான பிரதேசங்களிலுள்ள பல பொது மக்களது உடைமைகளை 24 மணி நேரமும் பாதுகாப்பதற்குரிய காவல் பணிகளை மேற்கொள்வது என்பது பொலிஸாரின் இயலுமைக்கு மிகவும் சவாலாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் எமது கிராம மட்ட அலுவலர்களும் பொலிஸாரும் இவ் உடைகளை பாதுகாப்பதில் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், திருட்டுக் கும்பல்களை 24 மணி நேரமும் கண்காணித்து கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சவாலாக உள்ளது.
எனவே பொது மக்கள் தமக்குரிய பொறுப்பினை சரிவர உணர்ந்து தமக்கு சொந்தமான மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள, தமக்குரிய சொத்துக்கள் மற்றும் உடைமைகளை திருட்டு கும்பல்களிடமிருந்து பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாம் மிகவும் தயவுடன் வேண்டி நிற்கின்றோம் என கோரிக்கை அறிக்கை விடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொது மக்களினால் அடையாளப்படுத்தப்படாது பாதுகாக்கப்படாத காணிகளில் பல சமூக விரோதிகளும் சமூக நலனுக்கு அப்பாற்பட்ட பல தீய செயல்களை செய்ய வாய்ப்பளிக்கும் என்பதால்
காணி உரிமையாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
காணி உரிமையாளர்கள் புலம் பெயர்ந்து வெளி நாடுகளில் வசிப்பின் தமது நம்பிக்கைக்குரிய உறவினர் அல்லது நண்பரின் உதவியின் ஊடாக தமக்குரிய காணிகளை அடையாளப்படுத்தி, அங்கு உள்ள உடமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதை நாம் நினைவூட்ட விரும்புகின்றோம்.
பல்வேறு சவால் மிக்க வகையில் மேற்கொள்ளப்படும் எமது நிர்வாக நடவடிக்கைகள் ஊடாக பொது மக்களின் பாவனைக்காக மீளவும் ஒப்படைக்கப்படும் காணிகளும் அங்கு உள்ள உடமைகளையும் பாதுகாப்பது என்பது அவ் காணி உரிமையாளர்களின் மிக முக்கிய பொறுப்பு என்பதுடன், அவ்வாறான பொறுப்பினை நிறைவேற்ற தவறுவது காணி விடுவிப்பு தொடர்பில் நாளாந்தம் நாம் மேற்கொள்ளும் நிர்வாக நடவடிக்கைக்கும் அது மிகவும் சவாலாக இருக்கும் என்பதை தயவுடன் நாம் நினைவூட்ட விரும்புகின்றோம்.
எனவே எமது பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள தங்களிற்கு சொந்தமான இருப்பிடங்களில் இயலுமான வரையில் மீளக்குடியமர முயற்ச்சி செய்யுங்கள்.
உடனடியாக அது சாத்தியமற்றது எனின் தமக்கு சொந்தமான காணிகளை நன்கு துப்பரவு செய்து அவற்றை முறையாக அடையாளப்படுத்தி அங்கு உள்ள தங்களது உடமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நாம் தயவுடன் வேண்டி நிற்கின்றோம்.
திருட்டு கும்பல்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் தங்களது காணிகளும் வீடுகளும் பயன்படுவதை தவிர்ப்பது எமது சமூகத்திற்கும் எமது மக்களுக்கும் தாங்கள் ஆற்றும் மிக முக்கியமான சமூகப் பொறுப்பு மிக்க கடமை என்பதை உணர்ந்து,
விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாம் மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
எமது பிரதேசத்தில் பல காணிகள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டு பல ஆண்டுகள் சென்ற பின்பும் தமது காணிகளை பெறுப் பேற்று துப்பரவு செய்து அங்கு மிளக் குடியமர அல்லது குறிப்பிட்ட அவ் காணிகளை விவசாய தேவைகள் போன்ற ஏதேனுமாரு தேவைக்குதன்னும் பயன்படுத்த, முயற்சி செய்யாத பொது மக்கள் இவ் விடையத்தில் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு நாம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ் விடயத்தில் தங்களிற்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படின் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க எமது அலுவலகம் தயாராகவே உள்ளது என்பதை கவத்தில் கொள்ளுங்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.