வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கரம் போட்டியில், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வேலணை மத்திய கல்லூரி கரம் அணி சாம்பியன் பட்டத்தை வென்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்து வரும் தீவகப் பிரதேச மாணவர்களுக்கு, இந்த வெற்றி மேலும் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த வேலணை மத்திய கல்லூரி அணி, இம்முறை மாணவிகளின் அர்ப்பணிப்பும் திறமையும், பாடசாலை அதிபர் ஹஸ்ரன் றோயின் முழுமையான ஆதரவும், உடற்கல்வி ஆசிரியர் அனோஜனின் தொடர்ச்சியான பயிற்சியும் காரணமாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை (13/06) நடைபெற்ற வடமாகாண திறந்த கரம் போட்டியில், வேலணை பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற வேலணை மத்திய கல்லூரி மாணவி ஜெ. விதுர்ஷினி ஒற்றையர் பிரிவில் வடமாகாண சாம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.