யாழ் போதனா வைத்தியசாலை மருத்துக் களஞ்சிய தீப்பரவலுக்கான உண்மைக் காரணம் இரசாயண பகுப்பாய்வின் பின்னரே தெரியவரும் என அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மருந்துக் களஞ்சியத்தின் இழப்பு பல ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளதுடன் நோயாளருக்கான மருத்துவ சேவையில் பாதிப்புகள் ஏற்படாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.


தீயில் எரியுண்ட யாழ் மருத்துவ களஞ்சிய தொகுதியை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில்,
இந்த அனர்த்தம் எமது மக்களுக்கு பேரிழப்பாகும். இது தற்செயல் நிகழ்வோ அன்றி ஏதாவது சதியோ என்று பலவாறான கோணங்களில் ஆராயப்படுகின்றது.
ஆனாலும் இது சதிச் செயலாக இருக்காது என நம்புகின்றேன். தற்போது துறைசார் தரப்பினரது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் துறைசார் அமைச்சுக்கு தெரியப்படுத்தி தேவையான மருந்துப் பொருட்களை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.