யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் நேற்று (25/07) மாலை இடம்பெற்ற யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஆமின் என்பவரே உயிரிழந்தவராவார்.

நேற்று மாலை வேளையில் ஆமின் அவர்கள் தனது வழக்கமான நாளாந்தப் பணிகளுக்காக சென்று திரும்பிய போதே, கிராமத்திற்குள் ஊடுருவியிருந்த ஒற்றை யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

யானை எதிர்பாராதவிதமாக அவரைத் தாக்கியதில் அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உடலத்தை மீட்டதுடன், செட்டிகுளம் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் வழங்கினர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செட்டிகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் கணிசமாக அதிகரித்துள்ளது.

காட்டுப் பகுதிகளை விட்டு வெளியேறும் யானைகள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து நெல் மற்றும் விவசாயப் பயிர்களை அழிப்பதுடன், வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன.

மாலை வேளைகளுக்குப் பிறகு வீடுகளை விட்டு வெளியேற அஞ்சும் சூழல் நிலவுவதுடன், பாடசாலைச் செல்லும் சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் பீதியுடனேயே சென்று வருகின்றனர்.

யானைகளின் ஊடுருவலைத் தடுக்க யானை வேலிகளை முறைப்படி பராமரிக்க வேண்டும் என்றும், ஊருக்குள் உலாவும் காட்டு யானைகளை உடனடியாகக் காட்டுப் பகுதிக்கு விரட்ட வனஜீவராசிகள் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Article
Leave a comment