மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, பேசாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள புதர் பகுதி ஒன்றிலிருந்து நேற்று (07/08) மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், உடனடியாக கிராம உத்தியோகத்தர் ஊடாக பேசாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
தகவலறிந்த பேசாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலம் தொடர்பில் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (வயது 41) என அடையாளம் காணப்பட்டார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், மீன்பிடித் தொழில் செய்து வந்தவர் என்பதும், அவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்திலிருந்து சற்றுத் தொலைவிலேயே அவரது வீடு அமைந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த குற்றத்தடுப்புத் தடயவியல் பொலிஸாருடன் இணைந்து பேசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த நபரின் தொலைபேசித் தொடர்பு நேற்றுமுன்தினம் (06/08) காலை 7.30 மணிக்கு மேல் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பேசாலை பொலிஸார், இம்மரணத்திற்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.