2026ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது 2026 ஜூன் 3ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் வரி செலுத்துவோரின் இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்குமான திருத்தங்களே இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வங்கி கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல், வணிகப் பதிவு, நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றுதல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு முக்கிய பரிவர்த்தனைகளுக்கு இனி வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சில மோட்டார் வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் இலாபம், இனிமேல் வரி விதிக்கப்படக்கூடிய வருமானமாகக் கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் மற்றும் கூட்டுப்பங்கான்மைகளுக்கான மூலதன இலாப வரி 15 சதவீதமாகவும் , அறக்கட்டளைகள், பரஸ்பர நிதியங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது.
மாதத்திற்கு 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட சேவைக் கொடுப்பனவுகளுக்கான 5 சதவீதம் தடுத்து வைக்கப்படும் வரியின் வரம்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சமூக ஊடக நிபுணர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஒளிப்பதிவாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோரும் இனி இந்த வரி வரம்பிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
வரி செலுத்துவோர் இனி மதிப்பீட்டு வரி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை. அவற்றுக்குப் பதிலாக, காலாண்டு வரி தவணைக்கட்டணங்கள் அதற்கு முந்தைய ஆண்டின் வரிப் பொறுப்பின் அடிப்படையில் கணக்கிடப்படும். குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆயுள் காப்புறுதி முதிர்வு, கொள்கை ஒப்படைப்பு அல்லது காப்புறுதிதாரரின் மரணத்தின் போது பெறப்படும் தொகைகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2024/25 வரி ஆண்டு வரையிலான தாமதக் கொடுப்பனவுகள் மற்றும் குறைவான வரிச் செலுத்தல்களுக்கான வட்டித் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனினும், நிலுவையிலுள்ள அசல் வரித்தொகை 2026 டிசம்பர் 2 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது