பலர் இறால்களை வெறுமனே தண்ணீரில் கழுவி சமையல் செய்வதுண்டு. ஆனால் இறாலின் மேற்புறத்தில் உள்ள கறுப்பு நரம்பை அகற்றுவதும் அதே அளவு முக்கியம் என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.
பலருக்கும் பிடித்தமான ஒரு கடல் உணவு, இறால். இறாலில் செய்யப்படும் பொரியல், குழம்பு, பிரியாணி மற்றும் சூப் என அனைத்துவகை உணவுகளும் பிரபலமானவைதான். எல்லோருக்கும் ஃபேவரைட்டான இறாலை, சமைப்பதற்கு முன்பு சரியாகச் சுத்தம் செய்வது முக்கியம். பலரும் இறாலைத் தண்ணீரில் கழுவி அப்படியே சமையலுக்குப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இறாலின் மேற்புறத்தில் உள்ள கறுப்பு நரம்பை அகற்றுவது மிகமிக முக்கியம் என்று உணவு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பலர் இறாலின் மேற்புறத்தில் உள்ள கறுப்பு கோட்டை நரம்பு என்று நினைத்து அப்படியே விட்டுவிடுவதுண்டு. ஆனால் அது உண்மையில் இறாலின் செரிமான அமைப்பின் ஒரு பகுதியாகும். அதில் செரிக்கப்படாத உணவு, அழுக்கு, மணல் துகள்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் இருக்கலாம். அதனால்தான் இறாலை சமைப்பதற்கு முன்பு இந்தப் பகுதியை அகற்ற அறிவுறுத்தப்படுகிரது. இந்தக் கருப்பு நரம்பை அகற்றாமல் சமைப்பது பெரிய உடல்நலக் கேடு இல்லை என்றாலும், அது சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, இறாலின் சுவை ஓரளவு மாறக்கூடும். சில சமயங்களில், மணல் அல்லது மண் துகள்கள் வாயில் சிக்கிக்கொண்டு, சாப்பிடும்போது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். மேலும், பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்களுக்கு வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற சிறிய பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த நரம்பு பெரிய இறால்களில் தெளிவாகத் தெரியும் என்பதால் அதை எளிதாக அகற்றிவிடலாம். சிறிய இறால்களில், அது மிகவும் மெல்லியதாக இருப்பதால் பார்ப்பது கடினம். இருப்பினும், அதைப் பார்க்கும்போது கவனமாக அகற்றுவது நல்லது. இதை நீக்குவது இறாலின் தரத்தையும் சுவையையும் மேம்படுத்துகிறது.
இறாலைச் சுத்தம் செய்யும் முறையும் மிகவும் எளிமையானது. முதலில், அவற்றை இரண்டு அல்லது மூன்று முறை சுத்தமான தண்ணீரில் கழுவவும். பின்னர், ஒரு சிறிய கத்தியைக் கொண்டு இறாலின் மேற்புறத்தில் ஒரு சிறிய கீறலை ஏற்படுத்தவும்.
பிறகு உள்ளே ஒரு கறுப்பு நரம்பு தோன்றும். அதை ஒரு கத்தியின் நுனியாலோ அல்லது பல்லிடுக்குக் குச்சியின் உதவியாலோ மெதுவாகப் பிடுங்கி எடுக்க வேண்டும். பின்னர் அதை மீண்டும் தண்ணீரில் கழுவி, சமைப்பதற்குத் தயார் செய்யவும்.
இறாலைச் சுத்தம் செய்யும்போது அதன் நரம்பையும் அகற்றிவிடுமாறு பல சமையல் கலைஞர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இது இறாலின் சுவையை மேம்படுத்துவதோடு, அதன் தோற்றத்தையும் அழகாக்குகிறது.
இறாலிலிருந்து நரம்பை அகற்றுவதென்பது முக்கியமாக சுகாதாரம், சுவை மற்றும் உணவின் தரம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். எனவே, இறாலைச் சமைப்பதற்கு முன் கட்டாயம் இந்தக் கறுப்பு நரம்பை அகற்ற நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள்.