யாழ். குடாநாட்டில் தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அது பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் முத்துக்குமார் உதயசிறி எச்சரித்துள்ளார்.
யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தீ அனர்த்தத்தை எதிர்கொள்ளக்கூடிய சக்தியுடன் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இல்லை. மேலும், யாழ்.மாநகர சபையிடம் தற்போது தீயணைப்பு வாகனங்கள் இல்லை.
மாறாக நீர் விநியோகிக்கும் வாகனம் ஒன்று தான் தற்காலிகமாக தீயணைப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது.
கடந்த 1983 ஆம் ஆண்டு யாழில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்று, அதன்பின்னர் ஏற்படவில்லை. ஆனால் அவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் சக்தி யாழ்.மாநகர சபையிடம் இல்லை.
ஆகவே, யாழ்.மாநகர சபையின் கீழ் இயங்கும் தீயணைப்பு பிரிவை தனியான பிரிவாக அமைத்து அதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்