வெசாக் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 20 கைதிகள் இன்று (12ஆம் தேதி) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ், நாட்டில் உள்ள 388 சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களில் குறுகிய கால சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் மட்டுமே இந்த விடுதலையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 20 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் அத்தியட்சகர் அவர்களுக்கு கைலாகு கொடுத்து விடைபெற்றனர்.
வெசாக் தினத்தை முன்னிட்டு, அரசாங்கம் சில கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கியுள்ளது. இது, அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
388 கைதிகளுக்கு வழங்கப்பட்ட இந்த பொது மன்னிப்பில் 384 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அடங்குகின்றனர். இந்த விசேட மன்னிப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வெசாக் தினத்தையொட்டி சிறைக் கைதிகளை சந்திக்க, பொதுமக்களுக்கு இன்று (12) மற்றும் நாளை (13) விசேட சந்திப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.