நெடுந்தீவு இறங்கு துறைக்கு முன்பாக அமைந்திருந்த வீடொன்றில் தங்கியிருந்தஅறுவர் இதேநாளில் (22.04.2023) அதிகாலை வேளை வெட்டியும் , அடித்தும் படுகொலை செய்யப்பட்ட பெரும் துயரத்தின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் இன்று(ஏப்ரல்22).
சம்பவ இடத்திலேயே ஐவர் உயிர் விட்டதுடன் , ஒருவர் வெட்டுக் காயங்களுடன்மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்27.04.2023 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தமை பெருந்துயரம்.
இச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன் (ஏப்ரல்22) இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது.
இச் சம்பவத்தில்
01. நாகநாதி பாலசிங்கம்
02. பாலசிங்கம் கண்மணிப்பள்ளை
03. வேலாயுதம் நாகரத்தினம்
04. கனகரத்தினம் பூரணம்
05. காரத்திகேசு நாகசுந்தரி
06. சுப்பிரமணியம் மகாதேவன்
ஆகியோர் உயிரிழந்து நெடுந்தீவையே சோகத்தில் ஆழ்த்தியமை மறக்கமுடியாத சம்பவம்.
ஒரே குடும்பஉறவுகள் ஒன்றாக தங்கியிருந்த வீட்டில் கொலை சந்தேக நபரும் தங்கியிருந்து இந்த துன்பியல் நிகழ்வை அரங்கேற்றியிருந்தமையும் , பின்னர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஊடக கொலைக்காக பயன்படுத்தப்பட்ட அரிவாள் மற்றும் உடுப்புகள் என்பன சம்பவம் இடம்பெற்ற வீட்டு கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதுடன் களவாடப்பட்ட பொருட்களில் பலவும் கைப்பற்றப்பட்டது.
கைது இடம்பெற்ற தினத்தில் இருந்து இன்று வரைக்கும் கொலை சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுவதும் ஊர்காவற்றுறை நீதி மன்றுக்கு அழைத்துவரப்படுவதுமான செயற்பாடு இடம்பெறுவதுடன் , கொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் , அயலவர்கள் மற்றும் கொலையாளி தொடர்பில் தகவல் வழங்கியோர் என பலர் நீநி மன்றுக்கு அழைப்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வாக்குமூலமும் பெற்றும் முடிந்தாயிற்று.
சம்பவம் இடம்பெற்று ஈராண்டுகள் முடிவடைந்தும் , கொலை சந்தேக நபர் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட நிலையிலும் இதுவரை எந்தவிதமான சட்டநடவடிக்கை மூலமான தீர்வும் வழங்கப்படவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.