நெடுந்தீவிலுள்ள தனியார் விருந்தகத்துக்கு நேற்றையதினம் (ஏப்ரல் 04) யாழ்பாணத்திலிருந்து மதுபானம் கொண்டுவந்தமையை வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளதுடன் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட செயற்பாடு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகத்திற்கு நேற்று முன்தினம் (ஏப்ரல் 03) அனுமதியற்ற உழவு இயந்திரத்தில் கொண்டுசெல்லப்பட்ட மதுபானம் பொலிஸாரால் வாகனத்துடன் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் மீண்டும் குறித்த விருந்தகத்தால் மதுபானம் கொள்வனவு செய்யப்பட்டு நெடுந்தீவில் வாகனத்துக்கான வழித்தட அனுமதிபெற்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது மதுபானம் மீண்டும் இறக்கப்பட்டதை கொண்டாடும் விதத்தில் வாகனத்துக்கு மாலையிட்டு வீதிகளில் வெடிகொழுத்தி மதுபான வாகனத்தை வரவேற்ற காட்சிகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் மதுபான விளம்பரங்களுக்கு தடை செய்துள்ள நிலையில் விருந்தகத்தினர் முகப்புதத்தகம் (Facebook) ஊடாக மதுபானம் கொண்டு வந்தமையினை கொண்டாடும் செயற்பாடு இளைய சமூகத்தினரை தவறான பாதையில் கொண்டுசெல்லும் முன்னுதாரணம் என நெடுந்தீவின் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளதோடு இதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளனர்.