அனர்த்தத்திலிருந்து நாட்டை மீள் கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சி தலைவர்களுடன் இன்று அவசர கலந்துரையாடல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான அனர்த்த நிலைமையிலிருந்து மக்களையும் நாட்டையும் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான செயல்திட்டத்தை உருவாக்கும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இன்று புதன்கிழமை (டிசம்பர் 03) கலந்துரையாடலுக்காக அழைத்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று மாலை 4.30 மணிக்கு கொழும்பில் உள்ள ரணில் விக்ரமசிங்க அவர்களின் அரசியல் செயல்பாட்டு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் வஜிர அபேவர்த்தன கூறுகையில், கடந்த காலங்களிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெற்றபோதும், அக்கால அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கைகளை எடுத்து உயிரிழப்புகளை குறைத்திருந்ததாக குறிப்பிட்டார். ஆனால் இம்முறை ஏற்பட்டுள்ள அனர்த்தம் வரலாற்றிலேயே மிகப் பெரிய சேதத்தையும் அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அவரது கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வகையில் 16 அம்சங்களைக் கொண்ட கோரிக்கையை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிந்து, அவற்றின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share this Article
Leave a comment