அரசுக்கு அரச நிர்வாக அனுபவம் கிடையாது-நளின் பத்திரன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஜே.வி.பி அல்லது தேசிய மக்கள் சக்திக்கு அரச நிர்வாகம் குறித்த எந்தவொரு அனுபவமும் கிடையாது என சர்வஜன அதிகாரம் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி நளின் பத்திரன தெரிவித்தார்.

அத்தோடு, இத்தகைய சூழலில் நாட்டை முறையாக நிர்வகிக்கத் தயாராகவுள்ள ஒரே தலைவர் திலித் ஜயவீர மட்டுமே என்றும் நளின் பத்திரன குறிப்பிட்டார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நாட்டில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி தலை தூக்கியுள்ளது. அரசாங்கம் பதவியேற்ற காலத்துடன் ஒப்பிடும்போது, எரிபொருள்களின் விலை பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக அரசு கூறினாலும், அது முற்றிலும் பொய்யான கூற்றாகும்.

இக்காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எரிபொருள் விலைகளைக் குறைத்துள்ள நிலையில், இலங்கையில் மட்டும் 140 சதவீதத்துக்கும் மேல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

எனவே, இன்னும் மக்களை ஏமாற்ற முற்படாமல், இப்போதே இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் நிலையை உருவாக்காமல், நாட்டை நிர்வகிக்கக்கூடிய தகுதியுடைய ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு அரசைக் கோருகின்றோம்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய, அந்தத் தகுதியும் திறமையும் கொண்ட எமது தலைவர் திலித் ஜயவீர தற்போது நாட்டைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளார்.

நாட்டை முன்னேற்றத் தகுதியுள்ள ஒருவரிடம் அதிகாரத்தை வழங்கி, அப்பாவி மக்களை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும் இந்தச் செயலை உடனடியாக நிறுத்துமாறு அரசை வலியுறுத்துகின்றோம் எனக் கூறினார்.

Share this Article
Leave a comment