மட்டக்களப்பு மாவிலங்கத்துறை களப்பு பகுதியில், சினிமா பாணியில் வாவியின் நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தரைமட்டமாக்கியுள்ளனர்.
யாருமே நெருங்க முடியாத சதுப்பு நிலங்கள் மற்றும் வாவியை அண்டிய புதர்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் இந்த கசிப்பு ஆலை இயங்கி வந்துள்ளது. பல நாட்களாகத் திட்டமிட்டு, இரகசிய தகவலின் அடிப்படையில் களமிறங்கிய பொலிஸார், சுற்றிவளைப்பை நடத்தியபோது அங்கிருந்த காட்சிகள் அதிரவைப்பதாக அமைந்தன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் அளவு அந்தப் பகுதியையே அதிரச் செய்துள்ளது..
✓14 இலட்சம் மில்லி லீட்டர் கோடா. வாவியோரம் பீப்பாய் பீப்பாயாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த விபரீதம்.
✓50,000 மில்லி லீட்டர் கசிப்பு. விற்பனைக்குத் தயாராக இருந்த போதை பானம்.
✓தொழில்நுட்ப உபகரணங்கள்.
கசிப்பு காய்ச்சப் பயன்படுத்தப்பட்ட செம்பு தாங்கிகள் மற்றும் நவீன உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சட்டவிரோத மதுபான சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த மூன்று முக்கிய புள்ளிகளை பொலிஸார் கையும் களவுமாகக் கைது செய்துள்ளனர். இவர்களுக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணைகள் சூடுபிடித்துள்ளன.