வென்னப்புவ – லுணுவில பிரதேசத்தில் உலங்குவானூர்தியை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
நேற்றையதினம்(30/11) சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக உலங்குவானூர்தி ஒன்று வென்னப்புவ லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உலங்குவானூர்தி அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவத்தின்போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் உலங்குவானூர்தியில் இருந்துள்ளனர்.
பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்தனர்.