வெளிப்படைத்தன்மையான நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாகவும், மனித உரிமைகள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவை இணைந்து கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மாநாட்டில் உரையாற்றிய பிரதமர்,
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செயற்பட முடியாது என்றும், அதற்கு அரச, தனியார் மற்றும் சிவில் சமூகத்தினர் இணைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போது வளர்ந்து வரும் நாடுகளில் ஆண்டு நிதிப் பற்றாக்குறை 2.5 முதல் 4 டிரில்லியன் டொலர்களாக உள்ளதுடன், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் அந்தப் பற்றாக்குறை 1.5 டிரில்லியன் டொலர்களாக உள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் இப்பிராந்தியத்தில் அளவிடக்கூடிய நிலையான அபிவிருத்தி இலக்குகளில் 88 சதவீதம் தவறவிடப்படும் அபாயம் உள்ளதால், நிதி முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டும்.
சவாலான காலத்திற்குப் பிறகு இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், 2025 ஆம் ஆண்டில் நாடு 5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், உள்நாட்டு உற்பத்தி 108.8 பில்லியன் டொலர்களாக உயர்ந்து தனிநபர் வருமானம் 5,000 டொலர்களைத் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும், அரசாங்கத்தின் நோக்கம் வெறுமனே புள்ளிவிவரங்களில் தெரியும் வளர்ச்சி மட்டுமல்ல, நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் நன்மைகள் நியாயமாகப் பங்கீடப்படும் உண்மையான பொருளாதார மாற்றமே ஆகும் என்று அவர் வலியுறுத்தினார்.
வணிகத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும், இருப்பினும் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலீடுகளை அல்லாமல், மனித உரிமைகள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்புமிக்க முதலீடுகளையே எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஊழியர்களுக்குப் போதுமான சம்பளம் வழங்குதல், தொழிற்பயிற்சி அளித்தல், சரியாக வரி செலுத்துதல் மற்றும் சுற்றாடலைப் பாதுகாத்தல் என்பன ஒவ்வொரு வணிகத்தினதும் அடிப்படைப் பொறுப்பாகும்.
பெண்கள் மற்றும் இதுவரை சமூகத்தில் ஒதுக்கப்பட்ட தரப்பினர் பொருளாதாரத்தில் இணைவதற்கு உள்ள தடைகளை நீக்குவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்.
காலநிலைச் சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்திய ‘நிலையான நிதி வரைபடம்’ மற்றும் ‘பசுமைப் பத்திரக் கட்டமைப்பு’ ஆகியவற்றின் மூலம் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களுக்கு நிதி வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச்செயலாளரும் UN Global Compact இன் தலைமை நிர்வாக அதிகாரியுமான சான்டா ஓஜியாம்போ, உலகம் எதிர்கொள்ளும் காலநிலை, வலுசக்தி மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு மூலதனப் பற்றாக்குறை இல்லை என்றும், நிலவும் நிதியைச் சரியான திசையில் திருப்புவதே தேவை என்றும் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரச-தனியார் துறையின் விரைவான ஒத்துழைப்பு அவசியமானது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த மாநாட்டில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உட்பட இராஜதந்திரிகள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தனியார் துறையின் சிரேஷ்ட நிர்வாகிகள் மற்றும் நிலையான அபிவிருத்தி நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர்.