விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்ற முடியாததால் விரலை வெட்டி மோதிரத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பருத்தித்துறையில் நடந்துள்ளது.
நேற்றுமுன்தினம் நள்ளிரவு இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. மட்டக்களப்பில் இருந்து வந்து தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்த பழனியாண்டி என்பவரே மோதிரத்துடன் விரலையும் இழந்துள்ளார்.
தம்பசிட்டி, பூவக்கரையில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் மூவர் வீட்டில் இருந்த நகைகளைக் கொள்ளையிட்டுள்ளனர்.
பழனியாண்டி விரல்கள் மோதிரங்கள் அணிந்திருந்ததை அவதானித்த கொள்ளையர்கள் அவற்றைக் கழற்றி எடுத்துள்ளனர். அதில் ஒரு மோதிரத்தை மட்டும் அவர்களால் கழற்ற முடியவில்லை.
அந்த மோதிரத்தைக் கழற்ற முயன்ற கொள்ளையர்கள் அது முடியாததால், விரலை வெட்டி மோதிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விரலை வெட்டி மோதிரத்தைக் கொடூரமாகக் கொள்ளையிட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தையும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.