வடக்கிற்கான ரயில் சேவைகள் குறைப்பு – ஜூலை 10முதல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இயக்கத்திற்குத் தேவையான போதிய இயந்திரத் தொகுதிகள் இல்லாததன் காரணமாக, தினமும் இயக்கப்பட்டு வந்த கொழும்பு – காங்கேசன்துறை நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இதற்கு முன்னர் தினமும் காலை 05.15 மணிக்கு கல்கிஸ்ஸையிலிருந்து ஆரம்பமாகி, காலை 05.45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த நகராந்தர கடுகதி ரயிலும், பிற்பகல் 01.50 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த ரயிலும், 2026 ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நான்கு நாட்கள் மாத்திரம் இயக்கப்படவுள்ளன.

யாழ் தேவி கடுகதி ரயிலும் தற்போது தினமும் இயக்கப்படுவதில்லை என்பதுடன், அது ஒரு நாள் விட்டு ஒரு நாளே இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த புதிய திருத்தத்தின் காரணமாக, ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் காலை வேளையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அல்லது காங்கேசன்துறை வரை பயணிப்பதற்கு எந்தவொரு ரயிலும் இல்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த நாட்களில் காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் ஒரேயொரு ரயில் இரவு 08.00 மணிக்கு புறப்படும் இரவு நேர தபால் ரயில் மாத்திரமே ஆகும்.

ரயில் தட்டுப்பாடு காரணமாக வடக்கிற்கான ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் தற்போதே கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நிலவும் இப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைக் காண்பதற்கு, பொறுப்புவாய்ந்த திணைக்களத் தலைவர்களோ அல்லது போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளோ இதுவரை முறையான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக, எதிர்வரும் காலத்தில் இந்த ரயில் நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் கசுன் சாமர ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்

Share this Article
Leave a comment