லெபனான் மீது தாக்குதல் – 31 பேர் பலி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 149 பேர் படுகாயமடைந்துள்ளதாக லெபனான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் மேலும் தீவிரமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்தது. இதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளைக் குறிவைத்துத் தனது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளிலேயே இஸ்ரேல் தனது தாக்குதல்களை அதிகளவில் மையப்படுத்தியுள்ளது.

மக்கள் செறிந்து வாழும் இந்தப் பகுதிகளில் நடக்கும் மோதல்களே அதிக உயிரிழப்புகளுக்கும், பெருமளவானோர் காயமடைவதற்கும் காரணமாக அமைந்துள்ளன.

இந்தத் தீவிரத் தாக்குதல்களுக்கு முன்னதாக, லெபனானில் உள்ள 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும், குறித்த நகரங்களில் இருந்து குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திலாவது பாதுகாப்பாக இருக்குமாறும் இஸ்ரேலிய இராணுவம் அவசர எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் பெருமளவானோர் படுகாயமடைந்துள்ளதால், லெபனான் வைத்தியசாலைகளில் அவசர மருத்துவச் சேவைகளை வழங்குவதில் பாரிய நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Share this Article