யாழ் பல்கலையில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியராக பதவி உயர்வு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை, பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய துறைகளின் துறைத்தலைவர்கள் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பத்மநாதன் கதிர்காமநாதன் மற்றும் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை நேற்றுமுன்தினம் (13/03) ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதன்படி, இரசாயனவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான ஜசோதா பிரபாகர் இரசாயனவியலில் பேராசிரியராகவும், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பத்மநாதன் கதிர்காமநாதன் பொறியியற் கணிதவியலில் பேராசிரியராகவும், ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆங்கில மொழி கற்பித்தலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 

Share this Article