நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் யாரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நிறைவேற்றுத்துறை நீதித்துறையை ஆக்கிரமிப்பதை அலட்சியப்படுத்த முடியாது. கடந்த காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன. அதன் விளைவு பாரதூரமானதாக அமைந்தது. கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறையும், செயற்பாடுகளையும் விமர்சித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் அதே பாதையில் தான் தற்போது பயணிக்கிறது.
நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் யாரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்பது தெரியவில்லை.
பொலிஸார் மக்கள் விடுதலை முன்னணியின் பொலிஸார் போன்று செயற்படுகிறார்கள்.தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகிப்பதால் பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனமும் தற்போது மலினப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளதால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது. பைத்தியம் தலைக்கேறியதை போன்று செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. பைத்தியம் தலைக்கேறினால் உயரத்தில் இருந்து கீழே குதிக்க வேண்டும். அரசாங்கம் தற்போது உயரத்துக்கு சென்று விட்டது. வெகுவிரைவில் கீழே குதித்து விடும் என்றார்.