ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் பஸில் ராஜபக்சவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதையடுத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது படம் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் படத்துடன் மேடையின் பிரதான பதாகையில் காட்டப்பட்டமையை அடுத்தே இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவுடன் இணைத்து அவரின் படம் காட்டப்படுகின்றமையானது, கட்சியின் செல்வாக்கை குறைத்து விடும் என்று கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் படம் மஹிந்த ராஜபக்சவுடன் இணைத்து பதாகையில் விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. கோத்தாபய ராஜபக்ச, கடந்த ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து அவரின் படம் நீக்கப்பட்டது.
இதேவேளை, அண்மைக்காலமாக பஸில் ராஜபக்சவை அரசியலில் மீண்டும் முன்னணிக்கு கொண்டு வரும் முயற்சிகளில் பொதுஜன பெரமுனவின் சிலர் செயற்பட்டு வருகின்றமை தொடர்பிலும் கட்சிக்குள் எதிர்ப்புக்கள் வலுப்பெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.