பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும், இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்து செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீக்கம் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
நாட்டின் வரலாற்று ரீதியான பல முரண்பாடுகளுக்கு இந்த சட்டமே பிரதான காரணியாக அமைந்துள்ளது. இதன் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான குறைபாடுகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவக் குழுவின் முதனிலைச் சட்ட வரைவின் அடிப்படையில், ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல்’ எனும் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்துக்குச் சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ளார்.
வெகுவிரைவில் இது வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டு, முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் பூகோள பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கருத்தில்கொண்டு, புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை அனைத்துத் தரப்பினரும் வழங்க வேண்டும் என்றார்