நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் போகோ ஹராம் மற்றும் ஐஎஸ்ஐஎல் போன்ற பயங்கரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள உள்ளூர் படைகளுக்குப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க அமெரிக்கா 100 இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.
நைஜீரியாவின் நார்த்பாச்சி பகுதியில் உள்ள விமான நிலையத்திற்கு இந்த அமெரிக்கப் படையினர் வந்து சேர்ந்ததை நைஜீரிய இராணுவத் தலைமையக செய்தித் தொடர்பாளர் சமய்லா உறுதிப்படுத்தினார்.
இந்த 100 இராணுவ வீரர்களும் நேரடியாகப் போர்க்களத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று இராணுவத் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் முக்கியப் பணிகளாக அதிநவீன இராணுவக் கருவிகளைக் கையாள்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்.
பயங்கரவாதக் குழுக்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, அவர்களைத் துல்லியமாகத் தாக்குவதற்கான உளவுத் தகவல்களைப் பகிர்தல். நைஜீரியப் படைகளுக்குப் பயங்கரவாத எதிர்ப்பு உத்திகளைக் கற்றுக்கொடுத்தல்.
நைஜீரியாவில் கடந்த வார இறுதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல் மூன்று கிராமங்களைத் தாக்கியதில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் 240 மில்லியன் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சரிபாதியாக உள்ள நிலையில், வடக்குப் பகுதியில் நடைபெறும் இத்தகைய தாக்குதல்களால் இரு தரப்பினருமே பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த டிசம்பர் 25ஆம் திகதி கிறிஸ்மஸ் அன்று, அமெரிக்கப் படைகள் நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள சோகோட்டோ (Sokoto) மாநிலத்தில் ஐஎஸ்ஐஎல் இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமெரிக்க இராணுவ வருகை, நைஜீரியாவின் இறையாண்மைக்கு உட்பட்டே இருக்கும் என்றும், நைஜீரியப் படைகளின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே அனைத்துப் பயிற்சிகளும் நடைபெறும் என்றும் மேஜர் ஜெனரல் சமய்லா உபா உறுதி அளித்துள்ளார்