நெடுந்தீவு பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராக நான் முதலில் நியமிக்கப்பட்டேன் அப்பிரதேச மக்களின் வலிகள் எனக்கு தெரியும் இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும்‘மறுமலர்ச்சிக்கான பாதை‘ திட்டத்தின் கீழ் ‘குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின்‘ ஆரம்ப நிகழ்வும மற்றும் நெடுந்தீவு பிரதேசசெயலர் பிரிவில் முதல் தடவையாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன குறிகாட்டுவானில் நேற்று சனிக்கிழமை காலை (ஒக். 04) நடைபெற்றது. அதன்போது உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளருடன் கதைக்கும்போது அடிக்கடி ஓர் விடயத்தைக் கூறுவார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தத்துறையின் அமைச்சராக இருக்கும்போது வடக்குக்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளலாம். அமைச்சர் பிமல் ரத்நாயக்க எந்தத் திட்டம் வரும்போதும் அதில்வடக்கு மாகாணத்தையே முதன்மைப்படுத்துவார் என்று அவர் கூறுவார். அதுஉண்மை.
நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்தபோது குறிகாட்டுவான் வீதிப் புனரமைப்பு மற்றும் இறங்குதுறை புனரமைப்புக்கு கடுமையாக முயற்சித்தேன். ஆனால் அதுகைகூடவில்லை. இப்போதுதான் சாத்தியமாகியிருக்கின்றது. இது மிகச்சிறப்பான தருணம்.
பல அமைச்சர்கள் வடக்கு மாகாணம் தொடர்பான விடயங்களை சாதகமாகவே அணுகுகின்றார்கள். அது எமது வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவற்றுக்கு மேலாக, நெடுந்தீவு பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராகமுதலில் நியமிக்கப்பட்டேன். அந்தப் பிரதேச மக்களின் வலிகள் தெரியும். அந்தப்பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது சிறப்பானது. இவ்வாறானஅபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் காலத்தில்முன்னெடுக்கப்படும், என்றார்.