இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே நேற்று (செப். 28) அதிகாலை மீன்பிடியில் ஈடுபட்ட காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதானவர்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மாலை முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.