செம்மணி மனித புதைகுழியில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக, அகழ்வுப் பணிகள் இடம்பெறும் குழிகளுக்குள் பெருமளவு நீர் தேங்கியிருந்தது. இதனால் கடந்த சில மாதங்களாக அகழ்வாய்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்றையதினம் (09/02) நல்லூர் பிரதேச சபையின் முழுமையான ஒத்துழைப்புடன், இயந்திரங்கள் மூலம் புதைகுழிக்குள் தேங்கியிருந்த நீர் வெளியேற்றப்பட்டது.

யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர் இன்றைய பணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

நீர் வெளியேற்றப்பட்டாலும், தரைப்பகுதி சேறு நிறைந்ததாகக் காணப்படுவதால், அகழ்வுப் பணிகளை எப்போது தொடங்குவது என்பது குறித்து மார்ச் மாதம் 16 ஆம் திகதி தீர்மானிக்கப்படும். அன்று இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக கடந்த ஆண்டு (2025) நீதி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாததால் மீண்டும் திறைசேரிக்குத் திரும்பியுள்ளது. எனவே இந்த ஆண்டுக்கான (2026) புதிய பாதீடு (Budget) தயாரிக்கப்பட வேண்டும். அந்தப் பாதீட்டை மன்றுக்குச் சமர்ப்பித்து, நிதியினை மீளப் பெற்றுக்கொள்ள சட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

செம்மணியில் இதுவரை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது மொத்தமாக  240 எச்சங்கள்  அடையாளம் காணப்பட்டன.    

அகழ்ந்தெடுக்கப்பட்ட   239 என்புக்கூட்டு எச்சங்களில் இருந்து பற்கள் மற்றும் நீண்ட எலும்புகள் டி.என்.ஏ மாதிரிகளுக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரிகள் கொழும்பில் உள்ள கெனோமிக்ஸ் ஆய்வுக்கூடம் அல்லது சில சந்தர்ப்பங்களில் துல்லியமான முடிவுகளுக்காக அமெரிக்கா அல்லது சீனா போன்ற நாடுகளின் தடயவியல் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளது.

Share this Article