சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு -சட்டம் கொண்டுவர நடவடிக்கை

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

புகையிலை, சிகரெட் விற்பனையை தடை செய்யும் வகையிலான சட்டமொன்றை கொண்டுவருவதற்கான பணிகள் இடம்பெற்றுவருவதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் வாய் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, வெற்றிலை பாக்குடன் புகையிலை கலந்து விற்பனை செய்தல் மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களைத் தடை செய்வதற்கான சட்டங்களை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிலையுடன் புகையிலையைச் சேர்த்து விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், சாதாரணமாக வெற்றிலை, பாக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதுடன், புகையிலை கலந்த வெற்றிலை மற்றும் பாபுல், மாவா போன்ற புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகையிலை விற்பனை தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் , உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், மதுவரி திணைக்களம் மற்றும் காவல்துறை ஆகிய நான்கு பிரிவினருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறுபவர்களுக்கு 2000 ரூபாய்க்கு குறையாத அபராதமும், ஒரு வருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனையும் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புகையிலை மற்றும் பாக்கு மெல்லுவதால் ஆண்டிற்கு புதிதாக 3,808 வாய் புற்று நோயாளர்கள் கண்டறியப்படுவதுடன், நாளொன்றில் சராசரியாக மூவர் உயிரிழக்கின்றனர். வெற்றிலையுடன் புகையிலை பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் இவற்றில் சுமார் 80 வீதமான உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்றும், சாதாரண மக்களை இந்த ஆபத்திலிருந்து மீட்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த அனைத்து பிரஜைகளுக்கும் ஆயுட்காலம் முழுவதும் சிகரெட் விற்பனை செய்வதையோ அல்லது கொள்முதல் செய்வதையோ தடை செய்யும் நோக்கத்தில் சட்டமொன்றை தயாரிக்க tobacco free என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் அமைச்சரவைப் பத்திரமொன்றும் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றார்.

Share this Article
Leave a comment