சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் அரசாங்கம் – சஜித்!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித அக்கறையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

 குருநாகல் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பிரியலாலின் 50 ஆவது ஆண்டு சமூக சேவை பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

 

2019 ஆம் ஆண்டைப் போலவே 2024 ஆம் ஆண்டிலும் போலியான வாக்குறுதிகளையும் பிம்பங்களையும் நம்பி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

தேர்தல் மேடைகளில் மின்சாரக் கட்டணக் குறைப்பு, மலிவு விலையில் எரிபொருள் மற்றும் 12 இலட்சத்திற்கு விட்ஸ் ரக கார் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கம், இன்று இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் மீது 50 வீத மேலதிக வரியை டிசம்பர் வரை நீடித்து நுகர்வோர் உரிமைகளை சுக்குநூறாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 அதேபோன்று, விவசாயிகளுக்கு நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறிவிட்டு, உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத வகையில் 120 ரூபாவை நிர்ணயித்து விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

 

அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் நாட்டின் அபிவிருத்தியோ அல்லது நிவாரணமோ அல்ல எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், நாட்டில் தனிக்கட்சி ஆட்சியை நிறுவும் சர்வாதிகாரப் போக்கிலேயே அரசாங்கம் இயங்கி வருவதாகக் கூறினார். 

 

கிராமிய சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பதவிகளைப் பெலவத்த கட்சி அலுவலகமே தீர்மானிப்பதாகவும், ஏனைய கட்சியினருக்கு அங்கு வாய்ப்பளிக்கப்படாமல் ஜே.வி.பி தனது அரசியல் ஆதிக்கத்தை முற்றிலுமாக உறுதிப்படுத்த முனைவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

 

நீதித்துறை சுதந்திரத்தை அழிக்கும் வகையிலும், ஜனநாயகத்தின் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமையை சீர்குலைக்கும் வகையிலும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

 உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மாதிரித் தீர்ப்புகளின் அடிப்படையில், இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது என்றும், கட்டாயம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

மேலும், நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின் மூலம் சுதந்திர ஊடகங்களையும் சிவில் சமூகத்தையும் கட்டுப்படுத்தி, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் பாழாக்கி வருகிறது. 

 

நாட்டின் 30 முதல் 40 சதவீதமான மக்கள் வறுமைக்கோட்டிற்குள் தள்ளப்பட்டுள்ள நிலையிலும், சர்வதேச நாணய நிதியம் கோருவதை விடவும் அதிகமான வரிகளை விதித்து மக்கள் மீது பெரும் வரிச்சுமையை அரசாங்கம் சுமத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

அத்துடன், ‘அஸ்வெசும’ நிவாரண உதவிகள் போட்டியிட்டு வெட்டப்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளிலிருந்து கலைஞர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களுக்கு 60 வயதிற்குட்பட்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கும் அரசாங்கம், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மட்டும் உயர்த்த முற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

 மேடைகளில் மக்களின் துயரம் குறித்துப் பேசியவர்கள் இன்று யதார்த்தத்தை மறந்து மேகக் கூட்டங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும், மக்களின் கண்ணீர் குறித்து அரசாங்கத்திற்கு எந்தக் கவலையும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Share this Article
Leave a comment