சட்டவிரோத சூதாட்ட இணையங்களை முடக்க உத்தரவு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையிலுள்ள 146 அனுமதியற்ற சூதாட்ட இணையதளங்களை முடக்குமாறு அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது

சட்டவிரோத இணையத்தள சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இணையத்தளங்களை இலங்கைக்குள் பயன்படுத்துவதை முடக்குமாறு அனைத்துத் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கும் அறியத்தரப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபையினால் 2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு அமைய விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாகவே இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆகிய பிரிவுகளின் கீழ் செல்லுபடியாகும் உரிய அனுமதி பத்திரமின்றி இலங்கைக்குள் இணையத்தள சூதாட்ட சேவைகளை நடத்துவது அல்லது அவற்றை ஊக்குவிப்பது, சட்டத்தின் 44ஆவது பிரிவுக்கு அமைவாகத் தண்டனைக்குரிய சட்டவிரோத குற்றமாகும் எனச் சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

Share this Article
Leave a comment