இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸிற்கு 134 கெப் ரக வாகனங்கள் கையளிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை பொலிஸின்  பயன்பாட்டிற்காக, இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேற்று (25/05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

இதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதுடன், இந்த கெப் ரக வாகனங்கள் வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இந்த அன்பளிப்பைப் பாராட்டி, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு நினைவுப் பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, டிமோ நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரஜீவ் பண்டிதகே ஆகியோரும், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும், சிரேஷ்ட பொலிஸ்  அதிகாரிகள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share this Article