உலகளாவிய இணையப் போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தியின் கடலடி கேபிள்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈரான் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஈரானின் அரசு சார்பு ஊடகமான ‘டாஸ்னிம்’ மற்றும் ‘ஃபார்ஸ் நியூஸ்’ ஆகியவற்றின் சமீபத்திய தகவல்களின்படி,
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேச இணைய கேபிள்களை தனது நாட்டின் “மூலோபாய தேசிய சொத்தாக” ஈரான் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச கடல்வழிச் சட்டங்களுக்கு மாறாக, இந்த ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் போர்ச் சூழலில் கட்டணம் வசூலிப்பது போல, இணையத் தரவுப் பரிமாற்றத்திற்கும் கட்டணம் அல்லது வரி வசூலிக்க ஈரான் ஆலோசித்து வருகிறது.
இந்தக் கேபிள்களின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை ஈரானிய நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும் என்றும், பிற நாட்டு நிறுவனங்கள் இந்தப் பகுதிக்குள் நுழையக் கட்டுப்பாடு விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் 97%-க்கும் அதிகமான இணையத் தரவுகள் இந்த கேபிள்கள் மூலமே பரிமாறப்படுகின்றன.
சர்வதேச வங்கிப் பரிமாற்றங்கள் பங்குச்சந்தை தரவுகள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகள் இந்தக் கேபிள்களையே நம்பியுள்ளன.
இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் இணையத் தரவுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்த வழித்தடத்தையே பயன்படுத்துகின்றன. இதில் ஏற்படும் பாதிப்பு இணைய வேகத்தை வெகுவாகக் குறைக்கலாம்.
கச்சா எண்ணெய் போக்குவரத்தை முடக்குவது போல, தற்போது இணையக் கேபிள்களை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க ஈரான் முயல்கிறது.
இந்தக் கேபிள்கள் மிகவும் நெருக்கமான பகுதியில் அமைந்துள்ளதால், சிறிய சேதம் ஏற்பட்டாலும் அது வளைகுடா நாடுகளின் டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பெரும் முடக்கத்திற்கு உள்ளாக்கும்.
ஈரானின் இந்த ஒருதரப்பான முடிவிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.