கந்தளாய் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நச்சுத்தன்மையுடைய விதை வகையொன்றை உட்கொண்டதன் காரணமாகக் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் கவலைக்கிடமான நிலையிலிருந்த 5 பேர் தற்பொழுது திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
குறித்த விதை வகை மாணவர் ஒருவரால் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் இந்த விதைகளை உட்கொண்டமையினாலேயே சுகவீனமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த விதை வகை தற்போது அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுகவீனமடைந்த மாணவர்களில் 20 ஆண் பிள்ளைகளும் 2 பெண் பிள்ளைகளும் அடங்குவதுடன், அவர்கள் அனைவரும் தரம் 6 இல் கல்வி பயில்பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.